பொன்மொழிகள்!
ஸ்ரீ ராமபக்தியைப் பெற்றால் போதும்; வேறு எதுவுமே வேண்டியதில்லை. என் பக்தனுக்கு பூரண ஞானமும் வைராக்கியமும் தானாகவே வந்து சேரும் இது ரிஷிகளின் வாக்கு ஆகும். இவ்விதம், உன் பிரார்த்தனைக்கிணங்க நான் முக்தி மார்க்கத்தை உனக்குப் போதித்திருக்கிறேன். இந்தப் போதனையைச் சரியானபடி கிரகித்து அதைப் பின்பற்றி நடப்பவன் யாராக இருந்தாலும், அவன் முக்தி பெறுவது நிச்சயம்.
-ஸ்ரீ ராமர் லட்சுமணனுக்கு வழங்கிய அறிவுரை
ஏ மனமே! ஏமாற்றாதே, உண்மை பேசு. சுகம் அடைய எது வழி? ராமனைப் புகழ்வதா அல்லது அகங்காரம் உடைய மக்களைப் புகழ்வதா?
-மகான் தியாகராஜர்
பிரம்மம் பெரியது, எல்லாவற்றுக்கும் நாயகமானது, எண்ணற்ற தெய்விக சக்திகளும் தெய்விக குணங்களும் பொருந்தியது.
- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
"அறிபவர் அறிவு' என்ற நிலைகளைக் கடந்த அத்வைத நிலையை நீ அடைய வேண்டும். அந்த நிலையில் ஞானப்பொக்கிஷம் மேலும் மேலும் உன்னைத் தேடி வந்து குவியும்.
-மகான் ஞானதேவர்
தற்செயலாகக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைபவன், இருமைகளைக் கடந்தவன் (இன்பம் துன்பம் போன்ற இரட்டைகளால் பாதிக்கப்படாதவன்), பொறாமை இல்லாதவன், வெற்றி தோல்விகளில் சமமாக இருப்பவன் இத்தகையவன் செயலில் ஈடுபட்டாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.
- பகவத்கீதை 4.22
குருவாயூரப்பா! என் உள்ளம் அளவற்ற கவலைகளாலும் நோய்களாலும் மிகவும் சலிக்கிறது. இந்த நிலையில் உன்னுடைய பரம ரஸமான அந்த ஞானஸ்வரூபம் உதிக்கும்படியும், ஆனந்தத்தால் மயிர்க்கூச்சும் கண்ணீர்ப்பெருக்கும் உண்டாகும்படியும் செய்து, தீராத பீடைகளின் துன்பத்தை நான் எப்படி மறப்பேனோ அப்படி அருள்புரியுங்கள்.
- ஸ்ரீமந் நாராயணீயம்
பகவானுடைய சந்நிதியில் ஸ்ரீ வைணவர்கள் சேர்ந்து நிற்கும்போது, திருமந்திரத்தையோ த்வய மந்திரத்தையோ மனதில் சிந்தித்தபடியே வணங்க
வேண்டும்.
- ஸ்ரீ ராமானுஜர்
உரிய காலத்தில் நடக்க வேண்டியது நடந்தே தீரும்; அழிய வேண்டியது அழிந்து சிதறிப் போகும். அவ்வாறு அழிந்து போவதைப் பக்கத்தில் நின்று பாதுகாத்தாலும் அது அழிந்துபோயே தீரும்.
- கவிச்சக்கரவர்த்தி கம்பர்
அகிம்சை, சத்தியம், அஸ்தேயம் (திருடாமை), பிரம்ம
சரியம், கபடமின்மை என்ற இந்த மனம் பற்றிய விரதங்களை அனுஷ்டிப்பதால் பகவான் மகிழ்கிறார்.
- பத்மபுராணம், பாதாள 84.42
- தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்