பிலிப்பின்ஸ் நாட்டை, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஹையான் புயல் வெள்ளிக்கிழமை தாக்கியது.
பிலிப்பின்ஸ் நாட்டின் மத்தியத் தீவான சமரில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.40 மணியளவில் இப்புயல் தாக்கியது. அதைத் தொடர்ந்து மிக வேகமாக வடமேற்குப் பகுதி நோக்கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ரோமியோ காஜுலிஸ் தெரிவித்தார்.
புயல் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
முன்னதாக, ஹையான் புயலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நாட்டு மக்களை அதிபர் பேனிக்னோ அகினோ வியாழக்கிழமை கேட்டுக் கொண்டார். ""நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதன் மூலம் புயலின் பாதிப்புகளைக் குறைக்க முடியும். நாம் அமைதியாக இருப்பதோடு, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது மற்றும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது ஆகிய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்'' என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் புயல் பாதிப்புக்குப் பெரிதும் ஆளாகக் கூடிய பகுதிகளில் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். புயல் கடக்கும் பாதையில் அமைந்துள்ள நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தங்கள் படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.