இலங்கையில் இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
இலங்கைக்கு எதிராக மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா தூண்டுவதாகக் கூறி, அந்நாட்டு தலைநகர் கொழும்பிலுள்ள இந்திய தூதரம் முன்பு நூற்றுக்கணக்கான தேசியவாத அமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக இலங்கை அதிபர் ராஜபட்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது உருவப்படங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை எரித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் வசந்த பண்டாரா கூறுகையில், "இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா தூண்டுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம்' என்றார்.
மேலை நாட்டு சக்திகளுடன் கைகோத்து, இலங்கைக்கு விரோதமான செயல்களில் ஜெயலலிதா ஈடுபடுவதாக பெங்கமுவே நலாகா என்ற புத்த பிட்சு குற்றம் சாட்டினார்.
1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13-ஆவது சட்டத்திருத்தத்தைக் முழுமையாகக் கொண்டுவருமாறு அண்மையில் இலங்கையை இந்தியா வலியுறுத்தியிருந்தது.
எனினும் அந்நாட்டின் தமிழ் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரத்தை வழங்கும் வகையில், முழுமையாக அந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முடியாது என்று இலங்கை மறுத்தது.