அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், வீட்டின் பின்புறம் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
பென்சில்வேனியா மாகாணம், வில்கின்ஸ்பர்க் பகுதியில் ஒரு இல்லத்தின் பின்புறம் நடந்து கொண்டிருந்த விருந்து நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது.
இதில், சம்பவ இடத்திலேயே 3 பெண்களும், ஒரு ஆணும் உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இரு நபர்கள் தாக்குதல் நிகழ்த்தியதாகத் தெரிய வந்துள்ளது.
விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நோக்கி அருகிலுள்ள சந்திலிருந்து துப்பாக்கியால் சுட்ட அந்த நபர்கள், வீட்டுக்குள் தப்பியோடியவர்கள் மீதும் பின்வாசல் பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர் என்று போலீஸார் தெரிவித்தனர்.