வங்கதேச விடுதலைப் போரின்போது போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக மதவாத ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாகவத் ஹுசைனுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்தில், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறுவதற்காக கடந்த 1971-ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தின்போது மதவாதக் கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதவாக, கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தினர்.
இந்த நிலையில், சுதந்திரப் போராட்டத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆள்கடத்தல், சட்டவிரோதமாக சிறை வைத்தல், சித்ரவதை, பாலியல் பலாத்காரம், படுகொலை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் முன்னாள் எம்.பி. ஷகாவத் ஹுசைன் உள்ளிட்டோருக்கு எதிராக சர்வதேச போர்க் குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அன்வருல் ஹக் தலைமையிலான அமர்வு புதன்கிழமை அளித்தத் தீர்ப்பில், ஷகாவத் ஹுசைனுக்கு மரண தண்டனை வித்தது.
மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஷகாவத் ஹுசைனை தூக்கிலிட்டோ, துப்பாக்கியால் சுட்டோ அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றலாம் என்று தெரிவித்தனர்.
கலீதா ஜியாவுக்கு ஜாமீன்
தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகளில், வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு டாக்கா பெருநகர நீதிமன்ற நீதிபதி கமருல் ஹுசைன் முல்லா ஜாமீன் வழங்கினார்.
வங்கதேச விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாக் கூறியதற்காக அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது.
இதுதவிர, போராட்டங்களின்போது நிகழ்ந்த வன்முறைகள் போன்ற காரணங்களுக்காக அவருக்கு எதிராக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.