

வான்னாகிரை' இணைய வைரஸையடுத்து, புதிய வைரஸ் கணினிகளைத் தாக்கி வருவதாக சீன தேசிய இணைய பாதுகாப்புத் தொடர்பான அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சீன தேசிய கணினி வைரஸ் அவசர உதவி மையம் (சி.வி.இ.ஆர்.சி.) வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
'யு.ஐ.டபிள்யு.ஐ.எக்ஸ்' என்னும் புதிய கணினி வைரஸ் பரவுவது தெரிய வந்துள்ளது. விண்டோஸ் மென்பொருளில் உள்ள குறைபாட்டைப் பயன்படுத்தி கணினிகளிலும் சேமிப்பகங்களிலும் ஊடுருவும் இந்த வைரஸ் அவற்றை முடக்கும் வல்லமை கொண்டது.
முந்தைய வான்னாகிரை என்கிற ரேன்சம்வேர் வகையைச் சேர்ந்த பிணைப் பணம் பறிக்கும் வைரஸ் போலவே 'யு.ஐ.டபிள்யு.ஐ.எக்ஸ்' வைரஸும் செயல்படுகிறது. ஒரு கணினி மூலம் நுழைந்துவிட்டால் கணினி சேமிப்பகத்தையும் முடக்கும் அபாயம் உள்ளது. மேம்படுத்தாத விண்டோஸ் மென்பொருளைப் பயன்படுத்துவோர் உடனடியாக, மேம்படுத்திய புதிய மென்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கவும் என்று சீன தேசிய கணினி வைரஸ் அவசர உதவி மையம் எச்சரித்துள்ளது.
'யு.ஐ.டபிள்யு.ஐ.எக்ஸ்' வைரஸ் தொடர்பாக டென்மார்க்கை சேர்ந்த இணைய பாதுகாப்பு சேவை நிறுவனமான ஹைம்டால் கடந்த வாரமே எச்சரிக்கை வெளியிட்டதாகத் தற்போது தெரிய வந்துள்ளது. 'யு.ஐ.டபிள்யு.ஐ.எக்ஸ்' வைரஸானது வான்னாகிரை வைரஸைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தது என்று அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
வைரஸ் என்பதும் ஒரு மென்பொருள் என்கிற நிலையில், அதன் செயல்பாட்டைத் தடுக்க அந்த மென்பொருளிலேயே ஒரு தடுப்புக் குறியீட்டு மென்பொருள் இருப்பது வழக்கம். ஆனால் 'யு.ஐ.டபிள்யு.ஐ.எக்ஸ்' வைரஸில் அது போன்ற தடுப்பு மென்பொருள் இல்லை என்று ஹைம்டால் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சீன அரசு அமைப்பான சி.வி.இ.ஆர்.சி. எச்சரிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேம்படுத்தாத விண்டோஸ் மென்பொருள் மூலம் வான்னாகிரை பரவியதாகக் கூறப்பட்டது. வான்னாகிரை ரேன்சம்வேர் வைரஸ் உலகம் முழுவதும் 150 நாடுகளில் கணினிகளை முடக்கியது.
வான்னாகிரை ரேன்சம்வேர் வைரஸ் சீனாவில் சுமார் 30,000 கணினிகளைத் தாக்கியதாக கணினி மென்பொருள் பாதுகாப்பு அமைப்பொன்று தெரிவித்தது. முக்கியப் பல்கலைக்கழகங்கள், ஏடிஎம்கள், சீன அரசு நிறுவனமான பெட்ரோசைனாவின் விநியோக மையங்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் சீனா அதனை மறுத்தது.
சீனாவில் பெரும்பாலும் திருட்டு மென்பொருள் பயன்படுத்தப்படுவதாகப் பரவலான குற்றச்சாட்டு உண்டு. இந்த நிலையில், புதிய வைரஸ் குறித்து சீன அரசு அமைப்பே தீவிர எச்சரிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் உலகெங்கும் பல்வேறு சைபர் வைரஸ் தாக்குதலுக்கு சீனா காரணம் என்று சில நிபுணர்கள் கூறி வருகின்றனர். தற்போது புதிய வைரஸ் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டு தங்களைப் பொறுப்பு மிக்க நாடாக சீனா காட்டிக் கொள்கிறது என்று பிரான்ஸ் அரசு இணைய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த செவரின் ஆர்சீன் கருத்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.