பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தற்போது துபையில் வசித்து வரும் பர்வேஸ் முஷாரஃப், ஆஜ் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இதுவரையிலும் ஜமாத்உத்-தாவா அமைப்பினருடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்தப்படவில்லை. ஆனால், அவர்கள் எங்கள் கூட்டணியில் இடம்பெற விரும்பினால், அதை வரவேற்கிறேன்.
காஷ்மீருக்காக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினரைப் போல் வேறு யாரும் அதிக அளவு தியாகம் செய்ததில்லை. ஆனால், அந்த அமைப்பினரை பயங்கரவாத அமைப்பாக சர்வதேச சமூகம் தெரிவிக்கிறது. காஷ்மீர் அரசியல் நிலவரத்தை சர்வதேச சமூகம் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்து விட்டது. அந்த அமைப்பினர் குறித்து மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. காஷ்மீரில் அந்த அமைப்பினரின் நடவடிக்கையை பயங்கரவாதம் என்று முத்திரை குத்தக் கூடாது. அந்த அமைப்புகள் (ஜமாத்-உத்-தாவா, லஷ்கர்-ஏ-தொய்பா) தன்னார்வத் தொண்டு அமைப்புகள் ஆகும். பாகிஸ்தானின் நலனைக் கருத்தில் கொண்டே அவை செயல்படுகின்றன. தலிபான், அல்-காய்தா ஆகியவற்றுக்கு ஆதரவாக அந்த அமைப்புகள் செயல்படவில்லை. அப்படியிருக்கையில், அந்த அமைப்புகளை நாம் ஏன் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்த வேண்டும்? என்றார் முஷாரஃப்.
பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹஃபீஸ் சயீது, கடந்த மாதம்தான் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், பர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தாம், லஷ்கர்-ஏ-தொய்பா, ஜமாத்-உத்-தாவா அமைப்புகள் மற்றும் ஹஃபீஸ் சயீதின் மிகப்பெரிய ஆதரவாளர் என்று குறிப்பிட்டிருந்தார்.