நீதிபதிகளுக்கு எதிரான நவாஸ் ஷெரீஃபின் (68) பேச்சுகளை ஊடகங்கள் ஒலிபரப்ப 15 நாள்களுக்கு தடைவிதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாகூரில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மஸாகிர் அலி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ரெகுலேட்டரி அத்தாரிட்டிக்கு (பிஇஎம்ஆர்ஏ) உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், முன்னாள் பிரதமர் நவாஸ், அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்கு எதிராகவோ அல்லது நீதிபதிகளுக்கு எதிராகவோ பேசிய எந்தெவாரு செய்தியையும் டிவி சேனல் உள்ளிட்ட அனைத்து மின்னணு ஊடகங்களும் 15 நாள்களுக்கு ஒலிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் கூறிய சர்ச்சைக்குறிய கருத்துகள் தொடர்பாக நிலுவையில் உள்ள புகார்கள் குறித்த அனைத்து விவரங்கள் தொடர்பான அறிக்கைகளையும் 15 நாள்களுக்குள் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என மின்னணு ஊடக கண்காணிப்பு கட்டுப்பாட்டு அமைப்பான பிஇஎம்ஆர்ஏ-வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிமன்ற அதிகாரி தெரிவிக்கையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் மின்னணு ஊடகங்களை மிகவும் நுண்ணிப்பாக கவனிக்க வேண்டிய பொறுப்பு பிஇஎம்ஆர்ஏவுக்கு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நவாஸ் மற்றும் நவாஸ் ஆதரவாளர்கள் பேசிய பேச்சுக்கள் ஊடகங்களில் வெளியாகும் நிலையில், அதுகுறித்து விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு ஊடக கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.