இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 387-ஐ தொட்டுள்ளது.
இந்தோனேசியா லோம்போக் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 387-ஐ தொட்டது. நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் சுடேபோ புர்வோ நுக்ரோகோ சனிக்கிழமை தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது லோம்போக் தீவின் தென் பகுதி தான். அந்த ஒரு பகுதியில் மட்டும் 334 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மேற்கு லோம்போக் பகுதியில் 30 பேர், கிழக்கு லோம்போக் தீவில்10 பேர், மேதரம் பகுதியில் 9 பேர், மத்திய லோம்போக் பகுதியில் 2 பேர் மற்றும் டென்பசார் பகுதியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், 67,875 வீடுகள், 468 பள்ளிகள், 6 பாலங்கள், 20 அலுவலகங்கள், 15 மசூதிகள் மற்றும் 13 சுகாதார மையங்கள் முற்றிலுமாக இடிந்தும், சேதங்களும் ஆகியுள்ளன.
இங்கு களப்பணிகள் மிகவும் கடினமாக உள்ளதாக சுடேபோ தெரிவித்தார். அங்கு பாதிக்கப்பட்ட பலர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். மேலும், பல அகதிகள் போதுமான கவனத்தையே இன்னும் ஈர்க்கப்படாமல் உள்ளனர்.
அந்நாட்டு பேரிடர் மீட்புக் குழுவின் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை அவசர காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமுதாய அமைப்புகள் லோம்போக் தீவில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.