வாஷிங்க்டன்: வடகொரியா முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு செய்வதற்கு முன்னர் கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது சாத்தியம் கிடையாது என்று அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழலைத் தணிக்கும் பொருட்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவருக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றது.
வடகொரிய தரப்பில் இத்தகைய கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் சமாதானத்தினை நோக்கிய முதல்படி என்று வற்புறுத்தப்பட்ட நிலையில், அதைப் பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை என்று அமெரிக்கா தெரிவித்தது. அத்துடன் முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
அப்பொழுது கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முறையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்க தரப்பில் வாய்வழி உறுதிமொழி அளிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இரு தரப்பு பேச்சின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவதுடன், கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வடகொரியா முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு செய்வதற்கு முன்னர் கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது சாத்தியம் கிடையாது என்று அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹித்தேர் நாரட்டின் அறிக்கையினை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 'கொரிய தீபகற்ப விவகாரத்தில் நாம் மற்ற விஷயங்களை பற்றி பேசுவதற்கு முன்னதாக முழுமையான அணு ஆயுத ஒழிப்பு என்பது நடைபெற வேண்டும்' என்று அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.