வாஷிங்க்டன் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கினால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான நடைமுறையில் உள்ள அமெரிக்காவின் சட்டங்களின் படி ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப தளவாடங்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.
ஆனால் அமெரிக்க ராணுவத் துறை செயலாளர் ஜிம் மாட்டிஸின் முயற்சியினால், அவ்வாறு தளவாடங்களை வாங்கும் நாடுகள் மீதான பொருளாதார தடைகளை நீக்கும் சிறப்பு உரிமை அமெரிக்க அதிபருக்கும், வெளிவிவகாரத் துறை செயலருக்கும் இருக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது அமெரிக்காவின் நெருங்கிய ராணுவ தோழமை நாடும், உலகிலேயே அதிக அளவு ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுமான இந்தியா தற்பொழுது ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்க உள்ளது. இவற்றில் தரையில் இருந்து விண்ணுக்குச் சென்று தாக்கும் வலிமை கொண்ட S -400 ஏவுகணைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கினால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைச் செயலர் ராண்டல் ஸ்க்ரிவர், வாஷிங்டனில் புதனன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது கூறியதாவது:
பொருளாதாரத் தடை நீக்கும் அதிகாரமானது, இந்தியா இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா அதைக் காக்கும் என்ற தோற்றத்தினை உருவாக்குகிறது. இது தவறான புரிதலை உருவாக்கும்.
எங்களுக்கு இந்த விவகாரத்தில் நிறைய கணிக்க வேண்டிய அம்சங்கள் இருப்பதால் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று இங்கு அமர்ந்து கொண்டு கூற இயலாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் புது தில்லியில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே முக்கியமான இரு தரப்பு சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், இந்த பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.