தோகா: பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்’ அமைப்பில் இருந்து விலகப் போவதாக கத்தார் திடீரென அறிவித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கிறது என்று கூறி , கத்தார் நாட்டுடனான தூதராக உறவை சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு நாடுகளும் துண்டித்தன.
தரை வழியாகக் கூட உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்ல இயலாத நிலைக்கு உள்ளான, கத்தார் மிகப்பெரிய பின்னடைவையும், பொருளாதார பாதிப்பையும் சந்தித்தது. இதன் பின்னர் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தலையிட்டு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கண்டன. இதனால் பொருளாதார்ச் சிக்கலில் இருந்து கத்தார் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்’ அமைப்பில் இருந்து விலகப் போவதாக கத்தார் திடீரென அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் சத் அல் - காபி தோகாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது
‘ஒபெக்’ என அழைக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என்று முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் எங்களின் முடிவு அமலுக்கு வருகிறது.
இது ஒன்றும் திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல; நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு வந்த ஒன்றுதான்
‘ஒபெக்’ நாடுகளின் கூட்டம் செவ்வாயன்று நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் எங்கள் முடிவை முடிவினை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கத்தாரின் இந்த முடிவு சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.