லண்டன்: பயன்பாட்டாளர்களின் தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் விற்பனை செய்தக் குற்றத்துக்காக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 10 மில்லியன் யூரோக்களை இத்தாலி அபராதமாக விதித்துள்ளது.
ஃபேஸ்புக்கில் நுழையும் ஒரு பயன்பாட்டாளரின் தகவல்களை, வணிக ரீதியாக செயல்படும் நிறுவனங்களுக்கு, பயன்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்காமல் விற்பனை செய்தக் குற்றத்துக்காக அந்நிறுவனத்துக்கு 10 மில்லியன் யூரோ மதிப்புள்ள இரண்டு அபராதங்களை இத்தாலியின் ஏஜிசிஎம் நுகர்வோர் மற்றும் சந்தை நிலவரக் கண்காணிப்பு அமைப்பு விதித்துள்ளது.
இது தொடர்பாக, ஃபேஸ்புக் தனது இணையப் பக்கத்திலும், செயலியிலும் பகிரங்க மன்னிப்பைக் கோர வேண்டும் என்றும் கட்டளை இட்டுள்ளது.
அபராதம் தொடர்பாக கருத்துக் கூறியிருக்கும் ஃபேஸ்புக் பேச்சாளர், இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் நாங்கள் பேசி பிரச்னையை சரி செய்வோம். பயனாளர்களின் தகவல்களை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கை மற்றும் முடிவுகள் குறித்து பயன்பாட்டாளர்களுக்கும் பகிரங்கமாக தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.