இஸ்லாமாபாத்: வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்து வாங்கிய விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தங்கை அலீமா கானுமுக்கு ரூ.2940 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட வருமானத்தைக் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக, அரசியல் ரீதியாகத் தொடர்புள்ள 44 நபர்கள் மேல் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அந்நாட்டு மத்திய வருவாய் ஆணையம் அளித்த புகாரின் காரணமாகத் தொடரப்பட்ட இந்த வழக்கினை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி, அலீமா சமர்ப்பித்த எழுத்துப்பூர்வ வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் யாவும் வெளிநாட்டில் செயல்படும் எனது குடும்பத் தொழில்கள் மூலம் கிடைத்த வருவாயினைக் கொண்டு கிழக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் 2008-இல் வாங்கப்பட்டவை. அத்துடன் அவற்றை வாங்குவதற்குத் தேவையான தொகையில் 50% கடனாகப் பெறப்பட்டது.
பின்பு 2017-இல் அவற்றை நான் விற்று விட்டேன். இதுதொடர்பாக மத்திய வருவாய் ஆணையதிற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் மத்திய விசாரணை ஆணையம் சமர்ப்பித்திருந்த விரிவான விசாரணை அறிக்கை கருத்திலெடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தங்கை அலீமா கானுமுக்கு ரூ.2940 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இதுதொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அவர் கவனத்தில் கொள்ளாத காரணத்தால்தான் இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.