புதிய பொருளாதாரத் தடையால் அணு ஆயுதப் பேச்சுவார்த்தை முறியும்: அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை

தங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளால், அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்காக அந்த நாட்டுடன் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை நிரந்தரமாக முறிந்துவிடும்
புதிய பொருளாதாரத் தடையால் அணு ஆயுதப் பேச்சுவார்த்தை முறியும்: அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை


தங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளால், அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்காக அந்த நாட்டுடன் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை நிரந்தரமாக முறிந்துவிடும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனின் வலதுகரமாக அறியப்படும் சோ ரியோங்-ஹே உள்ளிட்ட 3 உயரதிகாரிகள் மீது அமெரிக்கா அண்மையில் பொருளாதாரத் தடைகளை விதித்தது.
அவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி, அவர்கள் மீது அந்தத் தடை விதிக்கப்பட்டது.
இதற்கு, வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வட கொரிய அதிகாரிகள் கூறியதாவது:
பொருளாதாரத் தடைகள் மூலம் கடுமையான நெருக்கடி கொடுத்தால், வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டுவிடும் என்று அமெரிக்கா தப்புக் கணக்கு போடுகிறது.
உண்மையில், இத்தகைய பொருளாதாரத் தடைகள் காரணமாக அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்காக மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைதான் நிரந்தமாக முறிந்துவிடும் என்று அவர்கள் எச்சரித்தனர்.
தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.
இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புகள் இரண்டு முறை நடைபெற்றன.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக வட கொரியா போதிய அளவு செயல்படவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் போக்கைக் கடைப்பிடிப்பதாக வட கொரியாவும் ஒன்றையென்று குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில், வட கொரிய அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com