மஞ்சள் அங்கி போராட்டம் எதிரொலி: சலுகை அறிவிப்புகளை அமல்படுத்த பிரான்ஸ் அரசு தீவிரம்

பிரான்ஸில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் மஞ்சள் அங்கி போராட்டங்களின் எதிரொலியாக, வரிகள் குறைப்பு, அடிப்படை
மஞ்சள் அங்கி போராட்டம் எதிரொலி: சலுகை அறிவிப்புகளை அமல்படுத்த பிரான்ஸ் அரசு தீவிரம்


பிரான்ஸில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் மஞ்சள் அங்கி போராட்டங்களின் எதிரொலியாக, வரிகள் குறைப்பு, அடிப்படை ஊதிய உயர்வு போன்ற சலுகை அறிவிப்புகளை செயல்படுத்துவதில் அந்த நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
பிரான்ஸில் கடந்த ஐந்து வாரங்களாக மஞ்சள் அங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களின் கோரிக்கைகளை ஏற்று, வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை அதிபர் மேக்ரான் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், இந்த அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க அவரது தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை (டிச.18) கூடுகிறது. 
அந்தக் கூட்டத்தில், பல்வேறு பொருள்கள் மீதான வரிகளைக் குறைப்பது, அடிப்படை ஊதியத்தை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.
அதன் பிறகு, அந்த அறிவிப்புகளுக்கு சட்ட வடிவம் கொடுப்பதற்கான வாக்கெடுப்புக்காக, அவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, தனது சலுகை அறிவிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் அரசு தீவிரமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காற்று மாசைக் குறைத்து, பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை மேக்ரான் அரசு அதிகரித்து வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
எரிபொருள் விலையேற்றம் மட்டுமன்றி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்ப்பின் அடையாளமாக, ஒளிரும் மஞ்சள் மேலங்கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், மஞ்சள் அங்கி போராட்டம் என்றழைக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், நான்காவது வாரமாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் தீவிரமடைந்தது. 
அப்போது தீவைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. இதில், அதையடுத்து, நாடு முழுவதும் 1,700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சூழலில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு சலுகைத் திட்டங்களை அதிபர் இமானுவல் மேக்ரன் அறிவித்தார்.
வரிகளை பெருமளவு குறைப்பது, குறைந்தபட்ச ஊதியத்தில் 100 யூரோக்கள் (சுமார் ரூ.8,200) அதிகரிப்பது போன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிவித்ததுடன், அத்தகைய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில், பொருளாதார - சமூக அவசர 
நிலையையையும் அவர் பிரகடனப்படுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com