நியூயார்க்: சீக்கியர்களின் புனித பொற்கோயில் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள மேல் இருக்கை மற்றும் கால் மிதியடி உள்ளிட்ட கழிவறையில் பயன்படுத்தும் பொருட்கள், ஆன்லைனில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டதால் அமேசானுக்கு எதிராக சீக்கியர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
உலகெங்கும் உள்ள சீக்கியர்களின் புனித ஸ்தலமாக பஞ்சாபின் அமிருதசரஸில் உள்ள பொற்கோவில் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த கோவிலின் படம் மற்றும் புனித புத்தகத்தின் படத்துடன் கூடிய மேல் இருக்கைகள், மிதியடிகள், தரை விரிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் ஆன்லைனில் விறபனைக்கு உள்ளதாக பிரபல அமேசான் நிறுவனத்தில் விளமபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இதனால் உலகெங்கும் உள்ள சீக்கியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஒருங்கிணைந்த சீக்கிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சீக்கிய புனித ஸ்தலங்களில் ஒன்றான பொற்கோவிலின் படம் மற்றும் புனித புத்தகத்தின் படத்துடன் கூடிய மேல் இருக்கைகள், மிதியடிகள், தரை விரிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பிரபல அமேசான் நிறுவனத்தின் வழியே சில விற்பனையாளர்கள் ஆனலைனில் விற்பனை செய்து வருகின்றனர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
அமேசானின் இந்த செயலானது உலகெங்கிலும் உள்ள சீக்கியர்கள் மற்றும் கிழக்கு பகுதியில் வசிக்கும் பிற மதத்தினரையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே அமேசான் நிறுவனம் இதுபோன்ற பொருட்களின் விற்பனையை தனது தளத்தில் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். இனி விற்பனை நடைபெறாமல் இருப்பதை அமேசான் உறுதி செய்திடும் என நம்புகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.