ஆப்கானிஸ்தானில் தகார் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தகார் மாகாணத்தில் பெண் நாடாளுமன்ற வேட்பாளர் நாஸிஃபா பெக் யூசுஃபி இன்று (சனிக்கிழமை) பிற்பகல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சுமார் 1.30 மணி அளவில் மோட்டார் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 32 காயமடைந்ததாகவும் காவல்துறை செய்தித்தொடர்பாளர் முகமது ஜவாத் ஹஜாரி தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பொறுப்பேற்க இதுவரை எந்த அமைப்பும் முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் வரும் 20-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்களில் நடைபெறும் 3-ஆவது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும்.
முன்னதாக, இந்த வாரம் ஹெல்மண்ட் மாகாணத்தில் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் தேர்தல் வேட்பாளர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன் அக்டோபர் 3-ஆம் தேதி நாங்கர்ஹர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணி குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.