பாகிஸ்தானில், அந்த நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியமைக்காக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ராவல்பிண்டியில் கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டத்தில் பேசிய நீதிபதி ஷெüகத் அஜீஸ் சித்திகி, நீதித் துறையின் நடவடிக்கைகளில் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு தலையீடு செய்வதாகக் குற்றம் சாட்டியிருந்தார். அவரது அந்தப் பேச்சு, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதையடுத்து, சித்திகியின் பேச்சு குறித்து விசாரிக்குமாறு பாகிஸ்தான் தலைமை நீதிபதியிடம் ராணுவம் கேட்டுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி மியான் சகீப் நிஸார் தலைமையிலான உச்ச நீதிமன்ற குழு, இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிய நீதிபதி சித்திகியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் இம்ரான் கானுக்கு அந்தக் குழு பரிந்துரைத்தது.
அந்தப் பரிந்துரையை ஏற்ற மத்திய நீதித் துறை அமைச்சகம், நீதிபதி சித்திகி பதவியிலிருந்து அகற்றப்பட்டதற்கான அறிவிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது.