முகநூலில் 3 கோடி நபர்களின் தகவல்கள் திருட்டு

முகநூல் சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூல் சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான கெய் ரோசன் தெரிவித்ததாவது:
 கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், முகநூலிலுள்ள 3 கோடி பேரின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ளனர். அவற்றுள், 1.5 கோடி நபர்களின் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் 1.4 கோடி நபர்களின் பெயர், கைப்பேசி எண், முகவரி, படிப்பு விவரங்கள், பணி விவரங்கள், நண்பர்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களும் திருடப்பட்டுள்ளன.
 மேலும் 10 லட்சம் நபர்களின் கணக்குகளை நோட்டமிட்ட ஊடுருவல்காரர்கள், அவர்களிடமிருந்து எந்தத் தகவல்களையும் திருடவில்லை. மேலும், முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட வலைதளங்களிலுள்ள நபர்களின் தகவல்களும் எதுவும் திருடப்படவில்லை.
 இத்தோடு, பயனாளர்களின் வங்கி விவரங்கள் எதுவும் திருடப்படவில்லை. ஊடுருவல்காரர்கள் எந்த நோக்கத்தில் பயனாளர்களின் தகவல்களைத் திருடியுள்ளனர் என்பது இதுவரை அறியப்படவில்லை.
 தகவல் அளிக்கப்படும்: தற்போது, தொழில்நுட்ப மேம்பாடு மூலம், அந்தக் குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்தத் தகவல் திருட்டு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, பல்வேறு நாட்டு புலன்விசாரணை அமைப்புகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வகையில், பாதுகாப்பு அம்சங்களை நிறுவனம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
 திருடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து, பயனாளர்களுக்கு முகநூல் வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், சந்தேகப்படும்படியாக வரும் அழைப்புகளையும், மின்னஞ்சல்களையும் தவிர்க்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று ரோசன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com