கொழும்பு: இந்திய உளவு அமைப்பான 'ரா' தன்னைக் கொல்ல முயற்சித்ததாக அதிபர் சிறீசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்த இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு அதிபர் சிறிசேனா, “இந்தியா - இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான ரா என்னை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாமல் இருக்கலாம்” என்று பேசியதாகத் தகவல் வெளியானது. இந்த தகவலானது இந்திய இலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்நிலையில் இந்திய உளவு அமைப்பான 'ரா' தன்னைக் கொல்ல முயற்சித்ததாக அதிபர் சிறிசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது:
இந்திய உளவு அமைப்பான 'ரா' தன்னைக் கொல்ல முயற்சித்ததாக அதிபர் சிறிசேனா அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியதாக வெளியாகியுள்ள தகவல் தவறானது. அவர் அப்படி எதுவும் பேசவில்லை.
'ரா'உளவாளி ஒருவரை இலங்கை கைது செய்யப்பட்டதாக கூறி, இரு நாடுகள் இடையே பிரச்சினை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக மட்டுமே அவர் கூறினார்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.