லண்டன்: பயனாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2007 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் உரிய மற்றும் வெளிப்படையான அனுமதியின்றி பயன்படுத்தியதாக, பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா என்னும் தேர்தல் பிரசாரம் மற்றும் அது தொடர்பான தகவல் திரட்டல் & ஆராய்ச்சி நிறுவனமானது, இவ்வாறு சேகரிக்கப்பட்ட பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பயனாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்து தகவல் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பயனாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு, இங்கிலாந்து தகவல் பயன்பாட்டுச் சட்ட விதிகளின் படி அதிகபட்ச அளவான ரூ. ரூ.5 கோடி அபராதமாக விதிக்கப்படுகிறது.
பேஸ்புக் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்களின் மூலமாக சேகரிக்கப்படும் தகவல்களானது, பயனாளர்களின் உரிய மற்றும் வெளிப்படையான அனுமதியின்றி, தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தபட்டுள்ளது.
இதன்மூலம் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து பேஸ்புக் நிறுவனம் தவறியுள்ளது.
டிசம்பர் 2015- ல் இதுதொடர்பான தகவல்கள் வெளியான பொழுதும் அதற்கான நிவாரண நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் எடுக்கவில்லை.
அதேசமயம் இந்த விவகாரம் பெரும் சர்சையைக் கிளப்பிய பின்னரும் 2018-ஆம் ஆண்டுவரை கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்தின் மூல நிறுவனமான எஸ்.சி.எல் நிறுவனம் பேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.