ஜகார்தா: இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர்.
இந்தோனேசியாவின் முக்கியமான தீவுகளில் ஒன்று ஜாவா. இங்கு மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சுகாபூமி மாவட்டத்தில், சுற்றுலாத்தலம் ஒன்றுக்கு செல்லும் பொருட்டு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
வளைவான பாதையில் சென்ற போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 21 பேர் சம்பவ இடத்திலே பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்த தகவல் அறிந்து உடன் அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.