பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் மனைவி மரணம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமதர் நவாஸ் ஷெரீஃப் மனைவி குல்சூம் நவாஸ், செவ்வாய்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 68. தொண்டைப் புற்றுநோய் காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் லண்டனில் உள்ள ஹார்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் நுரையீரல் பகுதியிலும் நோய் தொற்று ஏற்பட்டது.
திங்கள்கிழமை இரவு முதல் இவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குல்சூம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நவாஸ், குல்சூம் தம்பதிக்கு மரியம், ஹாசன், ஹுசைன் மற்றும் ஆஸ்மா என 4 வாரிசுகள் உள்ளனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் பனமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது. அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது. அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.
மேலும், நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய முதலீடுகள் செய்த பணம், முறைகேடாகப் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வந்த ஊழல் தடுப்பு நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்தது. நவாஸின் மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்ப்பட்டது. அதையடுத்து, அந்த மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.