ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து மாகாண காவல்துறை தலைமையக அதிகாரி காயிஸ் சய்ஃபி கூறியதாவது:
மோமந்தாரா மாகாணத்தில், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக ஏராளமானோர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது அந்தக் கூட்டத்தினரிடையே புகுந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 25 பேர் உயிரிழந்தனர் என்றார் அவர்.
நங்கர்ஹார் மாகாணத்தின் அச்சின் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவதற்காக மோமந்தாரா மாகாணத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாகாணத் தலைநகர் ஜலாலாபாதிலிருந்து, பாகிஸ்தானையொட்டிய டோர்காம் பகுதிக்குச் செல்லும் சாலையில் மறியல் போராட்டம் நடத்த அவர்கள் சென்று கொண்டிருந்தனர்; அப்போது அவர்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
எனினும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதி போராட்டத்துக்கான காரணம் குறித்து அறிந்தவரா என்பது குறித்து தகவல் இல்லை.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.