வரலாறு காணாத பிரம்மாண்ட போர் ஒத்திகை!

பனிப் போர் காலத்துக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான போர் ஒத்திகையை ரஷியா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வரலாறு காணாத பிரம்மாண்ட போர் ஒத்திகை!

தொடங்கியது ரஷியா
பனிப் போர் காலத்துக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான போர் ஒத்திகையை ரஷியா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சீனா மற்றும் மங்கோலியாவுடன் இணைந்து நடத்தப்படும் இந்தப் போர் ஒத்திகையில், 1,000-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், 3 லட்சம் வீரர்கள், 36,000 ராணுவ தளவாடங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களது எல்லை அருகே நேட்டோ மூலம் ஐரோப்பிய நாடுகள் அளவுக்கதிகமாக படை பலத்தைப் பெருக்கி வருவதாக ரஷியா குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்த நாடுகளின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தப் போர் ஒத்திகை நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: விஸ்டோக்-2018' என்ற எங்களது இந்த ஆண்டுக்கான போர் ஒத்திகை, செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாள்களுக்கு இந்தப் போர் ஒத்திகை நடைபெறும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்தது.
இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள விடியோவில், போர் ஒத்திகைக்காக ராணுவ கவச வாகனங்களும், பீரங்கி வாகனங்களும் வரிசையாகச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.
கிழக்கு எல்லைப் பகுதியில் நடைபெறவிருக்கும் இந்தப் போர் ஒத்திகையில், ரஷியாவுடன் இணைந்து சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன. கடந்த 1981-ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் நடைபெற்ற ஸாபாட்-81' போர் ஒத்திகையைவிட அதிக எண்ணிக்கையில், தளவாடங்களும், போர் வீரர்களும் விஸ்டோக்-2018'-இல் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்தப் போர் ஒத்திகையில் 3 லட்சம் வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும், 1,000-க்கும் மேற்பட்ட போர் விமானங்களும், டேங்க்குகள், கவச வாகனங்கள், தரைப் படைத் தளவாடங்கள் என 36,000 ராணுவ தளவாடங்களும் இந்த போர் ஒத்திகையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
ஏறத்தாழ நிஜமான போருக்கு இணையான சூழலை ஏற்படுத்தி, இந்தப் போர் ஒத்திகை மேற்கொள்ளப்படும் என்றார் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஸாபாட்-2017' போர் ஒத்திகையின்போது, 12,700 வீரர்கள் பங்கேற்றதாக கூறப்பட்டது. எனினும், அந்தப் போர் ஒத்திகையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என்று நேட்டோ குற்றம் சாட்டியது.
இந்தச் சூழலில், தற்போது இந்த ஆண்டு நடைபெறும் போர் ஒத்திகையில் 3 லட்சம் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று ரஷியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஐரோப்பாவுடனான தங்களது மேற்கு எல்லைப் பகுதியில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இடம் பெற்றுள்ள நேட்டோ அமைப்பு தனது படை பலத்தை அளவுக்கு அதிகமாகப் பெருக்கி வருவதா ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்தச் சூழலில், அமெரிக்காவுடனான பனிப் போர் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதைவிட மிகப் பெரிய அளவிலான போர் ஒத்திகையை மேற்கு எல்லைப் பகுதியில் ரஷியா மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
மிகப் பெரிய போருக்கு முன்னோட்டம்': இந்த பிரம்மாண்ட போர் ஒத்திகையின் மூலம், சீனாவுடன் சேர்ந்து மிகப் பெரிய போருக்கு ரஷியா முன்னோட்டம் பார்ப்பதாக நேட்டோ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டைலான் ஒயிட் குற்றம் சாட்டியது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com