நிலவுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை, அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
விண்வெளியில் பயணிக்கும் சராசரி மனிதர்களின் கனவை நினைவாக்கும் வகையில், அவர்களை சுற்றுலா அழைத்துச் சென்று நிலவை சுற்றிக் காட்டும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இதற்காக, எங்களது சக்தி வாய்ந்த பிக் ஃபால்கன் ராக்கெட்' பயன்படுத்தப்படும் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.
ஏற்கெனவே, அடுத்த ஆண்டு இறுதிவாக்கில் உலகிலேயே முதல் முறையாக இரு சுற்றுலாப் பயணிகளை நிலவுக்கு அனுப்பவிருப்பதாக ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.