நைரோபி: கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகர மருத்துவமனை ஒன்றில் பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் 12 குழந்தைகளின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கென்ய நாட்டின் தலைநகரான நைரோபியில் பும்வானி மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு தொடர்ந்து அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், நோயாளிகள் அலட்சியத்துடன் நடத்தப்படுவதாகவும் மற்றும் குழந்தை மரணங்கள் சம்பவிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமிருந்தன.
இதனால் நைரோபி மாகாண ஆளுநர் மைக் சொங்கோ திங்களன்று அந்த மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனை அறை ஓன்றில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை திறக்கச் சொன்ன போது, அதில் 12 குழந்தைகளின் பிணங்கள் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய சொங்கோ, குழந்தைகளின் மரணங்கள் தொடர்பாக, சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் கண்காணிப்பாளர், தலைமை நிர்வாகி மற்றும் அன்று பணியில் இருந்த மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கென்யா நாடாளுமன்ற உறுப்பினர் ஜான்சன் சகஜா தெரிவித்துள்ளார்.