டோக்யோ: உலகின் மிகப் பெரிய மீன் சந்தை என்று அழைக்கப்படும் ஜப்பானின் 'சுகிஜி மீன் சந்தை' தனது 83 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக சனிக்கிழமையன்று மூடப்பட உள்ளது.
கடந்த 1657 ஆம் ஆண்டு ஜப்பானின் சுமிதா நதிக்கரையில், டோக்யோ வளைகுடா உள்வாங்கியதன் காரணமாக உருவான ஒரு இடத்தில், டோகோவா சோஹுனாட்டே என்பவரால் ஒரு மீன் சந்தை உருவாக்கப்பட்டது.
பின்னர் 1884-இல் இந்த சநதைக்கு அதிகாரப்பூர்வமாக 'சுகிஜி மீன் சந்தை' என்று பெயரிடப்பட்டது. ஆனால் 1923-இல் ஜப்பானில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் டோக்யோவின் பெரும்பாலான பகுதிகளோடு இதுவும் அழிந்து விட்டது. அதனைத் தொடர்ந்து 1935-ஆம் ஆண்டுதான் தற்போதுள்ள இடத்திற்கு இது மாற்றப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து அங்குதான் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக சுகிஜி மீன் சந்தையின் வெளிப்பகுதியில் உள்ள ஜோகாய் என்னும் சந்தைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2153 சதுர மீட்டர் பகுதி எரிந்து சாம்பலானது. அதன் பின்னர் இதன் பாதுகாப்புத் தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதன் விளைவாக சுகிஜிஜியில் இருந்து 3.4 கி.மீ தொலைவில் உள்ள டோயோசு என்னும் செயற்கைத் தீவுக்கு சந்தையினை இடம் மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அங்கு பாதுகாப்புத் தன்மையுடன் கூடிய புதிய கட்டடங்கள் இதன்பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உலகின் மிகப் பெரிய மீன் சந்தை என்று அழைக்கப்படும் ஜப்பானின் 'சுகிஜி மீன் சந்தை' தனது 83 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக சனிக்கிழமையன்று மூடப்பட உள்ளது.
அன்று ஒரு நாள் மட்டும் சந்தை மூடபப்டுவதன் காரணமாக அங்கு பணிபுரியும் 20000 தொழிலாளர்கள், வரும் 6-ஆம் தேதியன்று இந்த சந்தை நிரந்தரமாக மூடப்படுவதற்கான ஆயத்த கட்டப் பணிகளுக்குத் தயாராவார்கள்.
6-ஆம் தேதி மூடப்படும் இந்த சந்தையானது ஐந்து நாட்களுக்குப் பிறகு வரும் 11-ஆம் தேதி முதல் புதிய இடமான டோயோசுவில் செயல்படத் துவங்கும்.
'ஜப்பானிய கடல் உணவுகளின் மெக்கா' என்று அழைக்கப்படும் இந்த சந்தையானது தனது பழைய வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுமா என்பது கூர்ந்து கவனிக்கத்தக்க ஒன்றாகும்.