ஈரானில், தலையை மறைத்து அணியக் கூடிய துணியை (ஹிஜப்) கழற்றி போராட்டம் நடத்திய பெண்ணுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஈரானில் ஹிஜப் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகிறனர்.
அதன் ஒரு பகுதியாக, விடா மொவஹெட் என்ற பெண், தனது ஹிஜபைக் கழற்றி, உயர்த்திப் பிடித்து தலைநகர் டெஹ்ரானில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைது செய்தனர். எனினும், ஒரு மாதம் கழித்து அவர் தற்காலிக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பொதுமக்களை தவறிழைக்கத் தூண்டிய குற்றச் சாட்டின் பேரில் விடா மொவஹெடுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர் தெரிவித்தார்.
எனினும், விடா மொவஹெடுக்கு ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி பொதுமன்னிப்பு அளித்துவிட்டதாகவும், அதன் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.