ஐரோப்பா முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் "தி சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாரீஸ் நகரில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியதைப் போன்ற ஒருங்கிணைந்த பயங்கரவாதத் தாக்குதலை ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் நிகழ்த்துவதற்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பான உளவுத் துறை ஆவணங்களில், ஐரோப்பாவில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டு வரும் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒரு சில தாக்குதல் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவில் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டுச் சென்ற கணினி தகவல் சேமிப்பகத்திலிருந்து இதுகுறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சாம்ராஜ்யம் சரிந்த பிறகும், அந்த அமைப்பினரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்வதையே இது உணர்த்துகிறது என்று "தி சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இசையரங்கம், உணவகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு நடத்திய தொடர் தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.