இந்திய மீனவர்கள் மேலும் 100 பேரை நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்துள்ளது.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 360 பேர், 4 கட்டங்களாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதன்படி, கடந்த 7ஆம் தேதி இந்திய மீனவர்கள் 100 பேரை முதல்கட்டமாக பாகிஸ்தான் விடுதலை செய்தது.
இதைத் தொடர்ந்து, கராச்சியின் மாலீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் மேலும் 100 பேரை பாகிஸ்தான் தற்போது விடுதலை செய்துள்ளது.
கராச்சியிலிருந்து அவர்கள் 100 பேரும், ரயில் மூலமாக லாகூருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். லாகூருக்கு அழைத்து செல்லப்பட்டதும், வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் 100 பேரும் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
3ஆவது கட்டமாக வரும் 22ஆம் தேதி 100 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, 4ஆவது கட்டமாக 60 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் வரும் 29ஆம் தேதி விடுதலை செய்ய தீர்மானித்துள்ளது.
அரேபியக் கடல்பகுதியில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்வதை இந்தியாவும், பாகிஸ்தானும் வழக்கமாக கொண்டுள்ளன. இதன்படி, இருநாடுகளின் சிறைகளிலும் பிற நாட்டின் கைதிகள் அதிக அளவில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்தியாவும், பாகிஸ்தானும் அவ்வப்போது விடுதலை செய்து வருகின்றன.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்வதால், அந்த பதற்றம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.