விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு, லண்டன் தூதரகத்தில் அளிக்கப்பட்ட அடைக்கலத்தை நீக்கியது சரிதான் என்று ஈக்வடார் அதிபர் லெனின் மொரேனோ தெரிவித்துள்ளார்.
அரசு சார்ந்த ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலம் வெளியிட்டது தொடர்பாக, அசாஞ்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், ஈக்வடார் அரசு அவருக்கு அடைக்கலம் அளித்ததையடுத்து, லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில், அவருக்கு அளித்து வந்த அடைக்கலத்தை ஈக்வடார் அரசு, கடந்த 11-ஆம் தேதி விலக்கிக் கொண்டது. இதையடுத்து, லண்டன் காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். இது தொடர்பாக, லெனின் மொரேனோ செய்தித்தாள் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
மற்ற நாடுகளை வேவு பார்க்கும் நோக்கில், "உளவு மையம்' ஒன்றை அமைக்க அசாஞ்சே முயற்சித்தார். ஈக்வடாரின் முந்தைய அரசுகளிடம் அனுமதி பெற்று, லண்டனிலுள்ள தூதரக வளாகத்திலேயே இந்த மையத்தை அமைக்க அவர் முயன்றார். இது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். எங்கள் நாட்டுத் தூதரகத்தில் இருந்துகொண்டு, மற்ற நாடுகளின் நடவடிக்கைகளை நோட்டமிடுவதை அனுமதிக்க முடியாது.
அவருக்கு அடைக்கலம் தந்த இடத்தில் இருந்துகொண்டே, மற்ற நாடுகளை வேவு பார்க்க அவர் முயன்றுள்ளார். நாங்கள் எடுத்த முடிவு, தன்னிச்சையானது அல்ல. சர்வதேச சட்டங்களுக்கு உள்பட்டே, அசாஞ்சேவுக்கு அளித்து வந்த அடைக்கலத்தை நீக்க நாங்கள் முடிவெடுத்தோம் என்றார் அவர்.