உலகிலேயே முதல்முறையாக நிலத்திலும், நீரிலும் செல்லும் தாக்குதல் ரக படகை சீனா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு நாளிதழில் திங்கள்கிழமை வெளியான செய்தியில், "சீனாவின் கப்பல் கட்டும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வூசாங்க் கப்பல் கட்டும் நிறுவனத்தால் நிலம் மற்றும் நீரில் செல்லும் ஆயுதம் ஏந்திய தாக்குதல் ரக படகு தயாரிக்கப்பட்டுள்ளது. நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய வகையிலான இந்த படகுக்கு "மரைன் லிசார்ட்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படகின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. நிலம் மற்றும் நீரில் பயன்படுத்தக்கூடிய தாக்குதல் ரக படகை உலகிலேயே முதல்முறையாக சீனா தயாரித்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"மரைன் லிசார்ட்' படகை செயற்கைக்கோள் வழியாக ரிமோட் உதவியால் கட்டுப்படுத்தலாம். நீரில் 12 மீட்டர் நீளமுடைய இந்த படகு மணிக்கு சுமார் 92 கி.மீ வேகத்தில் செல்லும்.
அதேநேரம், நிலத்தில் படகில் இருக்கும் பெட்டிகள் படகுடன் இணையும். அதனால் படகின் நீளம் அதிகரிக்கும். நிலத்தில் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் இந்த படகு செல்லும். அதிக பெட்டிகளை இணைக்கும்போது படகின் வேகத்தை அதிகரிக்க முடியும். ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை இந்த படகின் ஆயுதப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. நிலத்தில் அதிகபட்சமாக 1200 கி.மீ தொலைவு வரை இந்த படகை பயன்படுத்த முடியும் என்றார்.
புதிய ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்காகவும், தயாரிப்பதற்காகவும் அதிக அளவில் செலவிடும் சீனா, இந்த தாக்குதல் ரக படகு திட்டத்துக்காக சுமார் ரூ. 12. 36 லட்சம் கோடி செலவு செய்துள்ளது.