மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் நுழைய முயன்று, திக்குத் தெரியாமல் தவித்து நின்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் எண்ணற்ற நபர்கள் ஊடுருவிச் செல்வது வழக்கமான ஒன்று. அதையொட்டி, எல்லைப் பகுதியில் அமெரிக்க ரோந்துப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம், எல்லைப் பகுதியில் யாரேனும் ஆபத்தில் சிக்கியிருந்தால், அவர்கள் அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ளும் வசதிகளையும் அமெரிக்கா நிறுவியுள்ளது.
அரிúஸானா பகுதியை ஒட்டிய இடத்தில், அதுபோன்ற அவசரகால ஒலி கடந்த புதன்கிழமை மாலையில் எழுப்பப்பட்டது.
இதையடுத்து விரைந்து சென்ற ரோந்துப் படையினர், அங்கு தவித்துக் கொண்டிருந்த 2 பேரை மீட்டனர். அவர்களை முகாமுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் இந்தியர்கள் என்பதும், எல்லை வழியாக அமெரிக்காவுக்கு ஊடுருவ முயன்றதும் தெரியவந்தது.
இதனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
எல்லைப் பகுதியில் 35 அடி உயர கம்பங்களை பல்வேறு இடங்களில் அமெரிக்கா நிறுவியுள்ளது. கம்பத்தின் அடிப்பகுதியில் அவசர உதவிக்கு அழைக்கும் வகையில் தொழில்நுட்பம் உள்ளது. அதில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், ரோந்துப் படையினரின் முகாமுக்கு அபாய ஒலி வரும். இந்த கோபுரங்கள் சூரிய மின்சக்தியில் இயங்குகின்றன.
கடந்த 2018-ஆம் ஆண்டில், தென்மேற்கு எல்லையில் ஊடுருவ முயன்ற 113 நாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்க ரோந்துப் படையினர் கைது செய்துள்ளனர்.