இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் இலங்கை அதிபர் சிறிசேனா.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் ஹோட்டல் என 7 இடங்களில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்த நிலையில், 8-வதாக இலங்கை தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் குண்டுவெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது. இதில் 35 வெளிநாட்டினர் அடங்குவர்.
400க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அதிபர் சிறிசேனா, இலங்கை மக்கள் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இலங்கை குண்டுவெடிப்புக்கான பின்னணியை கண்டறிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பது பற்றி துரித விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அமைதி காக்குமாறு அதிபர் சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க, மாலை 4 மணி முதல் சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ் ஆப், டுவிட்டர் போன்றவற்றை முடக்கவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ராணுவத்தை தெற்கு பகுதிக்கு செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கையில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக கடந்த 11 ஆம் தேதி அந்நாட்டு உளவுத்துறை எச்சரிந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.