வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே ஞாயிற்றுக்கிழமை (ஏப். 21) முதல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்ததாவது: வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே சீனாவில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை அவர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.
புல்வாமாவில் தாக்குதல் நடத்திய, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரம் குறித்து விஜய் கோகலே பேச்சுவார்த்தை நடத்துவார்.
இந்த விவகாரம் தொடர்பாக விஜய் கோகலே அடிக்கடி சீனப் பயணம் மேற்கொள்வார் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொண்டு வந்தன.
எனினும், அந்தத் தீர்மானத்தை சீனா முறியடித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அஸாருக்கு எதிரான தீர்மானத்தை சீனா தடுத்து நிறுத்தியது அது 4-ஆவது முறையாகும்.