கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை கந்தானை பகுதியில் கைப்பற்றப்பட்ட குண்டு திங்கள் மாலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகையினை ஒட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர்.
இந்நிலையில் ஞாயிறு காலை 8.45 மணியளவில் அங்குள்ள கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம், ஷாங்ரிலா, சினமான் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர விடுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
அதையடுத்து சிறிது நேரத்தில் தெஹிவல என்னும் இடத்தில உள்ள தங்கும் விடுதி ஒன்றிலும், அதையடுத்து குடியிருப்பு பகுதியிலும் வெடிகுண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 295 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளார்கள். அத்துடன் அங்கு வெடிக்காத சில குண்டுகளும் சில இடங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன
அதே சமயம் திங்கள் காலை இலங்கை சர்வதேச விமானநிலையம் அருகில் ஒரு குண்டும், கொழும்பு பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்திலிருந்து 87 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக அங்கு தொடந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை கந்தானை பகுதியில் கைப்பற்றப்பட்ட குண்டு திங்கள் மாலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட குண்டுகளை செயலிழக்க வைக்கும் முயற்சியில் இலங்கை போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை கந்தானை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் இருந்த குண்டு எதிர்பாராதவிதமாக வெடித்தது.
இதன்காரணமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. தொடந்து அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.