இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.
ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்துவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள புகழ்பெற்ற கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், மட்டக்களப்பு கட்டுவாபிட்டியா தேவாலயம், நீர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியுள்ளன. அதே போன்று கிங்ஸ் பெர்ரி, சான் கிரில்லா என 2 நட்சத்திர விடுதிகள் மற்றும் தெம்மட்டகொடா என்ற இடத்தில் மஹவிலா உதயனா சாலை பகுதியில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 220 உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாநது.
இந்நிலையில், பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்து பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 290 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்திய தூதரகத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொழும்பு பண்டார நாயக சர்வதேச விமான நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது என இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர் குண்டுவெடிப்பை அடுத்து இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிமுதல் திரும்பபெறப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும், இலங்கையில் நடத்தப்பட்ட பெரும்பாலான குண்டுவெடிப்புகள் தற்கொலை படை தாக்குதல் மூலம் நிகழ்த்தப்பட்டவை என இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக இருந்தநிலையில், தற்போது 5 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் 25 பேர் என்றும், அவர்களில் 11 பேர் அடையாளம் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.