இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக 24 மணி நேரத்தில் பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகளை மாற்றப்போவதாக அந்நாட்டு அதிபர் சிறீசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 321 பேர் உயிரிழந்தனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இலங்கை மட்டுமின்றி உலக நாடுகளையே உலுக்கியது.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு இலங்கை அதிபர் சிறீசேனா முதன்முதலாக நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்கிழமை) உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
"அடுத்த 24 மணி நேரத்தில் பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகளை மாற்றவுள்ளேன். பயங்கரவாத செயல்களை தடுப்பதற்காக வரும் நாட்களில் பாதுகாப்புப் படை மற்றும் காவல் துறை மறுசீரமைப்பு செய்யப்படும். தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கையை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவிக்கவில்லை. அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள உள்நாட்டு அடிப்படைவாத அமைப்புகள் நாட்டில் இருந்து அகற்றப்படும்.
பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறை மற்றும் முப்படைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி பலப்படுத்துவதற்காக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.