கொழும்பு: நிரப்பப்பட்ட குண்டுகளுடன் கொழும்புக்குள் லாரி மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஊடுருவியுள்ளதாக அந்நாட்டின் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 310 பேர் மரணமடைந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 24 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது
அத்துடன் திங்களன்று நடைபெற்ற தொடர் சோதனையில் இலங்கை சர்வதேச விமான நிலையம், கொழும்பு மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வெடிக்காத குண்டுகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாகவும், கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நிரப்பப்பட்ட குண்டுகளுடன் கொழும்புக்குள் லாரி மற்றும் சிறிய வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஊடுருவியுள்ளதாக அந்நாட்டின் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இதன்காரணமாக அங்குள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது நாடு முழுவதும் ராணுவத்தினர் உச்சபட்ச உஷார் நிலையில் உள்ளனர்.