அதிசயம் ஆனால் உண்மை.. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கோமாவில் இருந்து மீண்ட அதிசயப் பெண்!
மெடிக்கல் மிராக்கில் என்று மருத்துவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் ஐக்கிய அரபு நாடுகளில் நடந்துள்ளது.
அப்போது ஒமர் வெபைருக்கு 4 வயது இருக்கும். அதுவும் ஒரு சாதாரண நாள் என்றுதான் அப்போது அவர் நினைத்திருப்பார். ஆனால் அன்றைய தினம் அவர்களது வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நாளாக மாறும் என்று நினைத்திருக்க மாட்டார்.
பள்ளியில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல காரில் வந்த தாயும், தானும் விபத்தில் சிக்கிக் கொள்ள, சிறுவனின் தாய் அப்துல்லாவுக்கு தலையில் பலத்த அடிபட்டது. அந்த விபத்தில் இருaந்து தன்னைக் காப்பாற்ற தனது தாய் தன்னை கட்டிப்பிடித்து பாதுகாத்ததை இன்றும் நினைவு கூருகிறார் ஒமர். அந்த விபத்தில் 32 வயது அப்துல்லா கோமாவுக்குச் சென்றார்.
அந்த நாள் முதல் தனது தாய் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையை இழக்காமல், அவரது உதடுகள் தனது பெயரை உச்சரிக்கும் நாளுக்காக காத்திருந்தார் ஒமர். 27 வருடங்கள் கடந்தன. தற்போது ஒமருக்கு 32 வயது ஆகிறது. இதுநாள் வரை மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு டியூப் வழியாக அப்துல்லாவுக்கு உணவளிக்கப்பட்டு வந்தது.
இறுதியாக அந்த நாள் வந்தது. ஆம், அப்துல்லா கண் விழித்து தனது மகனின் பெயரைச் சொல்லி அழைத்தார். நான் பல நாளாகக் கனவு கண்டு வந்த அந்த நாள் இதுதான் என்று மகிழ்ச்சியில் குதித்தார் ஒமர்.
அப்துல்லா பூரண குணம் அடைந்து அபுதாபியில் தனது மகனின் வீட்டுக்கு வந்துள்ளார். அபுதாபியில் பல நாளிதழ்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கும் ஒமர், தனது தாயின் கதையை அனைவருக்கும் சொல்லி எப்போதும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என்று வலியுறுத்தப் போவதாகக் கூறுகிறார் தனது தாயின் கையைப் பிடித்தபடி.
32 என்பது இவர்களது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான எண் போல!