பிலிப்பின்ஸில் செவ்வாய்க்கிழமை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வுமைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது: தெற்கு பிலிப்பின்ஸில் உள்ள டுடுபிகனுக்கு அருகே செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு சாமர் மாகாணத்தில் உள்ள சான் ஜூலியன் டவுனை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானது என அந்த மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.5 அலகுகள் என உள்ளூர் வல்லுநர்கள் கணித்திருந்த நிலையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 6.4 அலகுகள் என மதிப்பிட்டுள்ளது. இப்புதிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.
பலி எண்ணிக்கை உயர்வு: திங்கள்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளதாக பிலிப்பின்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.