வெனிசூலாவில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ள மே மாதம் 1-ஆம் தேதி, அரசை ஆதரிக்கும் வகையில் மாபெரும் பேரணி நடத்தும்படி ஆதரவாளர்களுக்கு மடூரோ தலைமையிலான அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றால், அதனை முறியடிக்கும் வகையில் அவருக்கு ஆதரவானவர்களின் போட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக அந்த நாட்டு அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில், மடூரோ பதவி விலக வலியுறுத்தி, இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்ட பேரணியை வரும் மே மாதம் 1-ஆம் தேதி நடத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய நாடாளுமன்றத் தலைவருமான ஜுவான் குவாய்டோ அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், அதே தேதியில் அதிபர் மடூரோவுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பேரணிகளை நடத்தும்படி அவரது தலைமையிலான ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹெக்டர் ரோட்ரிகூஸ் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தொழிலாளர் தினத்தைக் குறிக்கும் வகையிலும், அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் அமைப்பிலிருந்து வெனிசூலா விலகுவதைக் கொண்டாடும் வகையிலும் அந்தப் பேரணிகளை நடத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெனிசூலா விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதற்கு அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு பயன்படுத்தப்படுவதாகக் கூறி, அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவதாக 2 ஆண்டுகளுக்கு முன்னரே நிக்கோலஸ் மடூரோ அறிவித்துவிட்டது நினைவுகூரத்தக்கது.