அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5. 9 அலகுகளாக பதிவாகியுள்ளது.
அருணாசலப் பிரதேச தலைநகர் இடாநகரில் இருந்து 180 கி. மீ தொலைவில், கடலுக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5. 9 அலகுகளாக பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், ரிக்டர் அளவுகோலில் 6. 1 அலகுகள் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மாநில காவல் துறை தலைமை அதிகாரி எஸ்.வி.கே. சிங் தெரிவித்ததாவது:
பூடான், திபெத், மியான்மர் ஆகிய நாடுகளை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வை உணர்ந்து நான் தூக்கத்தில் இருந்து விழித்தேன். அதையடுத்து அனைத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு நிலநடுக்கம் குறித்து விசாரித்தேன். அதிகாலை 1. 45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மக்கள் சற்று பீதியடைந்தனர். எனினும், அதிர்ஷ்டவசமாக எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். இந்தியாவில், பிரிவு 2, பிரிவு 3, பிரிவு 4 மற்றும் பிரிவு 5 என 4 பிரிவுகளாக நிலநடுக்கம் அபாயம் உள்ள பகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிரிவு 2-இல் உள்ள பகுதிகள், நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்த பகுதிகளாகவும், பிரிவு 5-இல் உள்ள பகுதிகள், நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதிகளாகவும் இருக்கும். அருணாசலப் பிரதேச மாநிலம், பிரிவு 5-இல் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.