இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பாக தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 7 இடங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 359 பேர் பலியானதாக ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி பலியானவர்களின் எண்ணிக்கை 253 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பலரின் உடல்கள் மோசமாக சிதைவடைந்துள்ளதால் இரண்டு முறை எண்ணப்பட்டுள்ளது எனவும், அனைத்து பிரேத பரிசோதனைகளும் முடிவடைந்ததும் டிஎன்ஏ மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்து, சரிபார்க்கப்பட்டதால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும் இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.