தற்கொலைத் தாக்குதல் எதிரொலி: இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் ராஜிநாமா

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.
தற்கொலைத் தாக்குதல் எதிரொலி: இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் ராஜிநாமா

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

முன்னதாக, இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 7 இடங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உளவுத் துறை தகவல் அனுப்பப்பட்டிருந்தது. எனினும், அதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள தவறியதற்காக பாதுகாப்புத் துறைச் செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ மற்றும் காவல் துறை தலைமை அதிகாரி புஜித் ஜெயசுந்தர ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அதிபர் மைத்ரிபால சிறீசேன புதன்கிழமை வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து கடமையைச் செய்யத் தவறியதற்கு பொறுப்பேற்று தனது ராஜிநாமா கடிதத்தை பெர்னாண்டோ வியாழக்கிழமை அளித்துள்ளார்.

மேலும் 16 பேர் கைது..: பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஏற்கெனவே  40 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை கண்டறியும்பொருட்டு, அந்நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் வியாழக்கிழமை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "ராணுவத்தினரின் உதவியுடன் தாக்குதல் தொடர்பாக இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களில் பெரும்பாலானோருக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் உள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்கள், உறவினரது வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்' என்றனர். இதனிடையே, மூன்று பெண்கள் உள்பட 6 நபர்களுடைய புகைப்படத்தை காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்டது. அவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் காவல் துறையில் தெரிவிக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

21 கையெறி குண்டு பறிமுதல்..: கொழும்புவில், பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையின்போது  3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21 கையெறிகுண்டுகள், வாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மீண்டும் குண்டுவெடிப்பு..: இதனிடையே, கொழும்பில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள புகோடாவில் வியாழக்கிழமை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 


மீண்டும் தாக்குதலுக்கு வாய்ப்பு: ரணில்

இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " நாட்டில் மேலும் சில இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை முறியடிக்கும் வகையில் சீரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதனால் மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம்"  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com