ஜகார்தா: இந்தோனேசியாவில் பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரையிலான ஓய்வில்லாத தொடர் பணிகளால், 272 பேர் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் தேர்தல் செலவினங்களை குறைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த தேர்தலானது கடந்த 17-ம் தேதியன்று ஒரேநாளில் நடத்தப்பட்டது.
இந்தோனேசியாவின் மக்கள்தொகை சுமார் 26 கோடியாகும். இதில் வாக்களிக்கும் உரிமை கொண்டவர்கள் 19.3 கோடி பேர். அவர்களில் 80 சதவீதம் பேர் 17-ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தனர்.
ஆனால் இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் 8 லட்சம் வாக்குச்சவடிகளை அமைப்பது, பின்னர் வாக்குச்சீட்டு முறையில் பதிவான வாக்குகளை எண்ணுவைத்து, அவற்றை மேற்பார்வையிடுவது என தேர்தல் பணிகள் அவ்வளவு எளிமையாக அமைந்து விடவில்லை.
இந்நிலையில் இந்தோனேசியாவில் பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரையிலான ஓய்வில்லாத தொடர் பணிகளால், 272 பேர் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக இந்தோனேசிய தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஆரிப் பிரியோ சுசான்ட்டோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
17-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் சம்பந்தப்பட்ட கூடுதல் பணிச்சுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சனிக்கிழமை இரவுவரை 272 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1878 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு, அவர்களின் ஓராண்டு சம்பளத்துக்கு இணையான பணத்தை இழப்பீடாக அளிக்க தேர்தல் கமிஷன் தீர்மானித்துள்ளது.
இன்னும் ஒரு சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருவதால், தேர்தல் முடிவுகள் மே மாதம் 22-ம் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.