இலங்கை கல்முனையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்பு 

இலங்கை கல்முனை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை கல்முனையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்பு 

கொழும்பு: இலங்கை கல்முனை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இலங்கையில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் மறைவிடத்தில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தியபோது, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 6 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தின தாக்குதல்களைப் போன்று மேலும் பல தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் ஹெவளியாகின. இதையடுத்து, பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதல் குறித்து, காவல் துறை செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகரா சனிக்கிழமை கூறியதாவது:

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கல்முனை நகரில் உள்ள வீடு ஒன்றில், ஈஸ்டர் பண்டிகை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலங்கை ராணுவத்தினரும், சிறப்பு அதிரடிப் படை வீரர்களும் வெள்ளிக்கிழமை இரவு அந்த வீட்டை நெருங்கினர். அப்போது, வீட்டில் பதுங்கியிருந்தவர்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் சிக்கி, உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். வீட்டுக்குள் பதுங்கியிருந்தவர்கள், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, தற்கொலை செய்து கொண்டனர். குண்டுவெடிப்புக்குப் பிறகு, அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 6 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 15 பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

அவர்களில் 3 பேர் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கை கல்முனை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஐ.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான அமேக் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 3 பேர் எங்கள் அமைப்பினர்.  அவர்கள் தானியங்கி ஆயுதங்களுடன் போலீசாருடன் சண்டையில் ஈடுபட்டனர். கைவசமிருந்த  வெடிபொருட்கள் தீர்ந்தபின் தங்களது உடல்களில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர்.

இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com