இலங்கையின் புதிய காவல்துறை தலைவர் மற்றும் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஆகியோரை நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா திங்கள்கிழமை அறிவித்தார்.
அந்நாட்டில் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முதல் பல இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் காரணமாக 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டும், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதையடுத்து அந்நாட்டின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஹேமஸ்ரீ ஃபெர்னாண்டோ மற்றும் காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் ராஜிநாமா செய்ய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் இலங்கையில் முகாமிட்டிருந்த 140-க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகளில் 70 பேர் வரை அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், முன்னாள் காவல்துறை தலைவர் என்.கே.இளங்ககூன், பாதுகாப்புத்துறை ஆலோசகராகவும், தற்போதைய காவல்துறை துணைத்தலைவர் சி.டி.விக்ரமரத்னே, இலங்கை காவல்துறையின் புதிய தலைவராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர்களை நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா திங்கள்கிழமை அறிவித்துள்ளதாக அதிபர் மாளிகை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.